இந்த சவாலான காலகட்டத்தில் நாட்டை புவி அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்ற முயற்சி

இன்று நமது நாடு பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. பாரதூரமான பொருளாதார நிலைமையை எதிர்கொள்வதால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சுருங்கி, வருமான வழிகள் இழக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம், நமது அடையாளம், தேசியத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள வேண்டும். அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமகாராம பன்னேகமுவ தியபேதி விகாரையின் வெசாக் நிகழ்வுகளுடன் இணைந்தாக 19 ஆவது தடவையாகவும் இடம்பெற்ற ருஹுணு வெசாக் பெரஹர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நமது நாடு எதிர்கொள்ளும் இந்த ஆபத்தான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டை புவி அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்றியமைப்பதற்கு பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். இதற்கு இடம் கொடுக்க முடியாது. நமது நாட்டைப் பாதுகாப்பதோடு, நாட்டு மக்களுக்கு பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பல்வேறு சக்திகளின் தேவைகளுக்கேற்ப நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு இடமளிக்க முடியாது. நமது நாட்டிற்கே உரித்தான பலமான பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிலைப்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அனைத்து துறைகளிலும் ஒரு நாடாக வலிமை பெற வேண்டும்.
பிள்ளைகள் ஞாயிறு தர்மபோதனை அறநெறிப் பாடசாலையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். ஆகையினால், தர்ம கல்வித் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். சமூகத்திற்கு நன்னெறியுள்ள, சட்டத்தை மதிக்கும், நாகரிகமுள்ள, ஒழுக்கமுள்ள, விழிப்புணர்வுமிக்க மற்றும் சிறந்த குடிமகனை உருவாக்குவதற்கும், புகையிலை, மது, போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகிய நல்லொழுக்கமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கிராமிய விகாரைகள் முக்கிய வகிபங்கை ஆற்றி வருகின்றன. ஆகவே இந்த வேலைத்திட்டத்தை பலப்படுத்த வேண்டியது நம்மனைவரினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.
![]()