அரசின் 15 எம்.பி.க்கள் நடத்திய இரகசியக் கூட்டம்; அரசின் உயர் மட்டம் தீவிர அக்கறை

தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த புதிய எம்.பி.க்கள் குழு ஒன்று இரகசியக் கூட்டமொன்றை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஒரு குறிப்பிட்ட வீட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு எம்.பி.க்கள் வருவதும் செல்வதும் சி.சி.ரி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியின் காரணமாக இந்த இரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்டதா என்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.
இருப்பினும், இந்த விவகாரம் அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி இவ்வாறான உள்வீட்டு விவாதங்கள் அல்லது வதந்திகள் குறித்துப் பொதுவாகக் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளையே கடைப்பிடித்து வருகிறது. இதுவரை கட்சியின் உயர் மட்டத்திலிருந்து இதற்கு எந்தவித உத்தியோகபூர்வ பதிலோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()