விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் முடியாமல் போனதை சமூகவலைத்தளங்கள் ஊடாக சாதிக்க முயற்சி – குற்றம் சாட்டும் தேரர்

பௌத்த தேரர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான பிணைப்பை விடுதலைப்புலிகள் அமைப்பினரின் தலைவரால் கூட உடைக்க முடியாது போன நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக அதனை மேற்கொள்ள முயற்சிப்பதாக அகலகட சிரிசுமண தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று(30.05.2026) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டின் வரலாற்றைச் சிதைக்க
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையில் மிக இறுக்கமான பிணைப்பொன்று நிலவி வருகின்றது.

இந்நாட்டின் வரலாற்றைச் சிதைக்க சோழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முயற்சித்த போதிலும், அவர்களால் அந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.
அதேபோன்று, இலங்கையில் ஐந்நூறு ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மேற்கத்திய நாடுகளாலும், முப்பது ஆண்டுகள் யுத்தம் புரிந்த விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் கூட அந்தப் பிணைப்பை உடைக்க முடியவில்லை.
எனினும், தற்போது மிகவும் துரதிர்ஷ்டவசமான முறையில், சமூக வலைத்தளங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, பௌத்த சாசனத்துக்கும், கௌதம புத்தரின் தத்துவங்களுக்கும், மகா சங்கத்தினருக்கும் எதிராக மிக மோசமான முறையில் அவதூறு பரப்பும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களின் ஊடாக பௌத்த பிக்குகளை அவமதிப்பதன் மூலம், இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலைபெற்றுள்ள பௌத்த கலாசாரத்தை வீழ்த்தி, நாட்டை ஆபத்தான நிலைக்குத் தள்ளச் சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
பௌத்த சாசனத்தை வீழ்த்த
பிக்குகளைப் பலவீனப்படுத்துவதன் மூலம் புத்த சாசனத்தை வீழ்த்தி, இந்நாட்டை ஆப்கானிஸ்தான் போன்றதொரு நிலைக்குத் தள்ளும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தகைய சதித்திட்டங்கள் குறித்து பௌத்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பௌத்த காலத்தில் தேவதத்த தேரர் போன்றவர்கள் இருந்தபோதிலும், அது உண்மையான சங்கத்தினருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல, தர்மசோக மன்னர் அறுபதாயிரம் பிக்குகளைச் சாசனத்திலிருந்து நீக்கிய போதிலும், அது மகா சங்கத்தினருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அதேபோல, இன்றும் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சங்க சமூகத்தையும் மதிப்பிட்டு, பௌத்த சாசனத்தை வீழ்த்த இடமளிக்கக்கூடாது.
பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.பல தசாப்தங்களாகத் தாம் அரசாங்கங்களிடம் வலியுறுத்தி வரும் சங்க நிர்வாகச் சாசனத்தை பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
ஒவ்வொரு நிக்காயவுக்கும் உரித்தான நிர்வாக விதிமுறைகளுக்குச் சட்ட அந்தஸ்து வழங்குவதே உண்மையான தீர்வாகும். சங்க சபைக்கே பிக்குகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
பிக்குகள் செய்யும் தவறுகளைத் திருத்த, வினய பீடகத்தில் உள்ள ஒழுக்க விதிகளை முறையாகப் பயன்படுத்தினால் போதுமானது என்றும் அகலகட சிரிசுமண தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
![]()