அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஜீன் 19ம் திகதி கட்டளைக்காக திகதியிடப்பட்டது.
தெல்லிப்பளை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும், பரப்புரைகளையும் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே தெல்லிப்பளை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இன்னும் சில தரப்புகளுக்கும் எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம், வலையொளி தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டது.
எதிர் மனுதாரர் சார்பில் சமர்ப்பணங்கள் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் ஜீன் மாதம் 19ஆம் திகதிக்கு கட்டளைக்காக மன்று திகதியிட்டது.
குறித்த வழக்கில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் முன்னிலையாகியுள்ளனர்.
![]()