பிள்ளையான் தொடர்பான விசாரணைக்கு அழைப்புவரும் வரை காத்திருக்கிறேன்! – கேள்வி கேட்க தயாராகும் நாமல்

பிள்ளையான் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைக்கும் வரை காத்திருக்கிறேன். நானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் கேட்கவுள்ளேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகல் பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சிகளையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. எமது அரசியல் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கிறோம். அரசாங்கம் அதற்கு அச்சமடையத் தேவையில்லை.
எம்மை பின்தொடராமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.மக்கள் ஆணை உள்ளது என்று குறிப்பிட்டுக் கொள்ளாமல் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்துகிறேன்.
பிள்ளையான் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைக்கும் வரை காத்திருக்கிறேன். நானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் கேட்கவுள்ளேன். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபரை தூதகரத்துக்கு அழைத்து எவ்வாறு பேச முடியும்.
புத்தசாசனத்தை மலினப்படுத்துவதற்கு திட்டமிட்ட வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள். அட்டமஸ்தான தேரர் விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை. இந்த விடயத்தை அரசியலுக்குட்படுத்துவது முற்றிலும் தவறானது. நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.
![]()