பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கஜேந்திரன் குற்றச்சாட்டு!

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வாக்குமூலம் பலாலி பொலிசாரால் பெறப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து நேற்றையதினம் பலாலி பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்கள்.
அன்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தை குழப்பும் வகையில் பொலிஸார் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். அதற்குப் பிறகு மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் ஒரு பொய்யான வழக்கினை பதிவு செய்தனர்.
போக்குவரத்துக்கும், பொலிசாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைத்துவித்ததாக தெரிவித்தே இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கத்திற்காக நாங்கள் நீதிமன்றத்துக்கு சமூகம் அளித்த நிலையில், அது தொடர்பான வாக்குமூலத்தினை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்குமாறு நீதிமன்றம் எமக்கு அறிவுறுத்தியது. அதன் பிரகாரம் நேற்றையதினம வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் இந்த போராட்டங்களை ஜனநாயக முறையில், நீதிமன்ற கட்டளைகளுக்கு மதிப்பளித்து, பொலிசாரது அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளித்து நாடத்தி வருகின்ற போதிலும், அந்தப் போராட்டத்தை நிறுத்தி சட்டவிரோத விகாரைக்கு காணியை வழங்கி விட வேண்டும் என்பதற்காக இனவாத பொலிசாரால் எங்களுக்கு எதிராக அவ்வப்போது இவ்வாறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே இவ்வாறு வாக்குமூம் மூலம் பதிவு செய்யப்பட்டது என்றார்.
![]()