ஹோண்டுராஸில் அடுத்தடுத்து பயங்கர துப்பாக்கிச் சூடு!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் கடலோரப் பகுதிகளில் நேற்று (21) ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல்களால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் உள்ள டுரிஜிலோ என்ற நகரின் ரிகோரஸ் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பனை மரத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அங்கிருந்த தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பொது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் யூரி மோரா அளித்த தகவலின்படி, இந்தத் தோட்டத்தில் மட்டும் 19 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளனர்.
முதலாவது சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே, குவாத்தமலா எல்லைக்கு அருகில் உள்ள ஒமோவா நகரில் இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தலைநகர் டெகுசிகல்பா பகுதியில் இருந்து ஒமோவா நகருக்கு சென்று கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தையும் குறிவைத்து ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென பதுங்கித் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், துணை கமிஷனர் லெஸ்டர் அமடோர் உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் பொலிஸ் விசாரணைக்கு முன்பாகவே எடுத்துச் சென்றதால், பலி எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் தொடக்கத்தில் சற்று குழப்பம் நிலவியதாகக் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எட்கார்டோ பராஹோனா தெரிவித்துள்ளார்.
தற்போது தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய சிறப்புப் படைகள் விசாரணைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் உடனடியாக நேரடி இராணுவத் தலையீடு செய்யப்படும் என்றும், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் ஹோண்டுராஸ் அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
![]()