20 மாதத்தில் நாட்டின் கடன் சுமை 10,700 கோடி டொலரால் அதிகரிப்பு; டொலரின் பெறுமதியும் 292 இலிருந்து 343 ரூபாவாக உயர்வு

டொலரின் பெறுமதி ஒரு ரூபாவால் அதிகரிக்கப்படும் போது நாட்டின் கடன்சுமையானது 40 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது என்றும், இதன்படி அநுரகுமார திஸாநாயக்க நாட்டை பெறுப்பேற்ற பின்னர் கடந்த 20 மாதங்களில் நாட்டின் கடன் சுமையானது 20,000 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய வங்கி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மரிக்கார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
அனுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது டொலரின் பெறுமதி 292 ரூபாவாகும். ஆனால் அது தற்போது 343 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதன்படி 51 ரூபாவினால் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இப்போது இதற்கு முகம் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் டொலரின் பெறுமதி ஒரு ரூபாவால் அதிகரிக்கப்படும் போது கடன்சுமை 40 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்படும். அதாவது அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் டொலரை கட்டுப்படுத்த முடியாமல் எமது நாட்டின் கடன் சுமையானது 20,000 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. இங்கே அரசாங்கம் பொய்களை கூறிக்கொண்டிருந்தாலும் கிராமங்களுக்கு சென்று பாருங்கள் மக்கள் எப்பஎவ்வாறு வாழ்கின்றார்கள் என்பது தெரியும். 76 வருட சாபம் என்று கூறினாலும் இரண்டு மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் இரண்டு தடவைகளில் அதிகரிக்கப்பட்டதை 76 வருடங்களில் கேள்விபட்டதில்லை. அத்துடன் மத்திய வங்கிக்கு ஹெக்கர்கள் புகுந்ததாகவும் 76 வருடங்களில் அறிந்ததில்லை. அஸ்வெசும இரண்டு தடவைகள் வழங்கியதாகவும் கேள்விப்பட்டதில்லை.
இவர்கள் என்ன கூறினாலும் இவர்கள் நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டின் மொத்த கடன்தொகை 93 பில்லியன்(9,300 கோடி) டொலராகவே இருந்தது. ஆனால் கடந்த 20 மாதங்களில் 107.2 பில்லியன்(10,702 கோடி) டொலராக அதிகரித்துள்ளது. என்ன செய்து இந்த கடனை அதிகரித்தனர். அபிவிருத்திகளை செய்யவில்லை.
கடந்த காலங்களில் மத்தியக் கிழக்கு யுத்தத்தின் மீது சுமத்தி அதனை மறைக்க முயற்சித்தனர். ஆனால் அவ்வாறு இல்லை. நம்பிக்கையில்லாமையினால் முதலீடுகள் வரவில்லை. வாகன இறக்குமதியை தடை செய்தால் அது பிரச்சினையாகும் என்று கருத்தி அதனை வேறு வகையில் செய்கின்றனர். வேலை முடியாதவர்கள் என்ன கூறினாலும் முடியாது. ஒரு மணித்தியாலத்தில் 40 மில்லியனால் கடன் சுமை அதிகரிக்கின்றது என்றார்.
![]()