முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு – நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்

தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் பங்கெடுக்க உள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் (21) அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளவுள்ள நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இதை காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
59 ஆண்டுகளுக்கு பின்னர்
“காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஷ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைக்க மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
59 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இணையுவது எங்களுக்குப் பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் திராவிட அரசியல் எழுச்சியடைந்த பிறகு, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதும், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
தேர்தலுக்கு முன்பாகவே அமைச்சரவைப் பதவிகள் தொடர்பாக காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை திமுக நிராகரித்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆதரவு
மேலும், 41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸுக்கு 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளையே வழங்க திமுக சம்மதித்திருந்தது.
இதற்கு மாறாக, விஜயின் கட்சி பின்னணிப் பேச்சுவார்த்தைகளில் 70 தொகுதிகள் வரை வழங்க முன்வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பெரும்பான்மைக்கு சற்றே குறைவாக இருந்தாலும் வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசுக்கு, 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆதரவு வழங்கியது.
அதன் பின்னர் திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜயின் கட்சியுடன் இணைந்தது. இதனிடையே, அமைச்சரவையில் இணைய கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம்
“தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இணைய வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம்,” என்று தமிழக வெற்றி கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்தக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
![]()