இலங்கை

பிள்ளையான் குழுவின் 2000 பேருக்கு அரச நிதியில் வழங்கப்பட்ட கூலி.. வெளியான பரபரப்பு தகவல்கள்

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID), சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களிலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஏனைய சில நடவடிக்கைகளிலும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே முக்கிய பங்காற்றியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில், பிரான்சில் உள்ள அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளதாகவும், இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம்..

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் பிரான்சுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் குழுவின் 2000 பேருக்கு அரச நிதியில் வழங்கப்பட்ட கூலி.. வெளியான பரபரப்பு தகவல்கள் | Cid Explosive Revelations Easter Attacks Shani

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி திலீப் பீரிஸ் நீதிமன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் சுரேஷ் சாலே “மூல சூத்திரதாரியாக” செயற்பட்டுள்ளார் என்றும், ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்கை அடைவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், அதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய சுரேஷ் சாலே, புலனாய்வுத் தகவல்கள் ஏனைய நிறுவனங்களுக்குச் சென்றடைவதைத் தடுக்கும் நோக்கில் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் அரச தரப்பு மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், 2017 மார்ச் 10 அன்று அலியார் சந்தியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான சைனி உள்ளிட்ட நபர்களுக்கு, இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பிள்ளையான் ஆகியோரிடமிருந்து பிணைக்கான நிதி உதவி கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளது.

அரசியல் நோக்கம்..

 

இந்தச் சமர்ப்பிப்புகளின்படி, சுரேஷ் சாலேயின் கோரிக்கைக்கு இணங்க, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொதுப் பணத்திலிருந்து 250,000 ரூபாவையும், பிள்ளையான் 50,000 ரூபாவையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பிள்ளையான் குழுவின் 2000 பேருக்கு அரச நிதியில் வழங்கப்பட்ட கூலி.. வெளியான பரபரப்பு தகவல்கள் | Cid Explosive Revelations Easter Attacks Shani

 

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைப் பாதுகாப்பதற்காகப் பொதுப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அரச தரப்பு, தேர்தலுக்கு முன்னர் தகவல்கள் கசிவதைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிள்ளையானுடன் தொடர்புடைய குழுவினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இணைந்து, அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒப்பந்தக் கொலைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை, கீத் நொயார் மீதான தாக்குதல், லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுடன் இக்குழுவுக்குத் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானின் குழுவோடு தொடர்புடைய 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு ஊடாகச் சம்பளம் பெற்றுள்ளனர் என்றும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபர்களின் சட்டத்தரணிகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பொதுப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் திலீப் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அசாத் மௌலானாவின் குடும்பத்திற்கு அடைக்கலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அசாத் மௌலானாவின் குடும்பத்தினர் சுரேஷ் சாலேயினால் அஹுங்கல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாகவும், மௌலானாவுக்குத் தூதரகம் ஒன்றில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குற்றம் சாட்டினார்.

பிள்ளையான் குழுவின் 2000 பேருக்கு அரச நிதியில் வழங்கப்பட்ட கூலி.. வெளியான பரபரப்பு தகவல்கள் | Cid Explosive Revelations Easter Attacks Shani

 

இந்நிலையில், இது தொடர்பான ஹோட்டல் பதிவுகளை விசாரணையாளர்கள் பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் சாலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தி சவாலுக்கு உட்படுத்தாதவரை அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் வாதிட்டுள்ளார்.

அனைத்துத் தரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதவான், சுரேஷ் சாலேயின் நீதிமன்ற முன்னிலையாகல் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 127ஆவது பிரிவின் கீழ் அவர் வாக்குமூலம் அளிப்பதற்கான கோரிக்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் மீதான உத்தரவுகள் ஜூலை 1ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார். தொடர் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சுரேஷ் சாலே தற்போதும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button