ஜனாதிபதி இன்று மட்டு. விஜயம்; பல நிகழ்வுகளில் பங்கேற்பார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அதனை முன்னிட்டு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு – போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம் எனும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை அடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா இன்று மாவட்டத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் முகமாக விஜயம் செய்யவுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக முதலாவது நிகழ்வாக 345 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிகசாலையாக அமைந்துள்ள புதிய பொது நூலகத்தை காலை 9.30 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 3 ஆவதாக, பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் தேசிய நிகழ்வாக போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயற்றிட்ட நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பினர், பிரஜா சக்தி உறுப்பினர், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
![]()