வயதை துணைக்கு அழைப்பதேன்?… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

வயதாகிவிட வழக்கத்ததை மாற்றி
வழக்கத்துக்கு மாறான வாழ்வையா
இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்
வயதாகி விட்டது என்பதனால்
கண்பார்வையின் குறைநீக்கி
கண்ணாடி அணிவதில்லையா
வயதாக விட்டதனால் நரைமயிர்
இருக்கட்டுமே என்று விடாமல்
சாயம் பூசாமல் இருக்கிறோமா
வயதாகி விட்டது என்பதால்
வடை பாயாசத்துடன் விருந்து
வேண்டாம் என்றா சொல்கிறோம்
வயதாகி விட்டது என்று விடாமல்
பொய்ப் பல்லைக் கட்டியாவது
புன்னகை செய்கிறோமல்லவா
பல யுகங்கள் வயதாகி விட்டதே என்று
பகவானை முதுமையாக காட்டிட
ஏதாவது முயற்சி செய்கிறோமா
பருவ வயதினராய் நம்பவைத்ததோடு
பகவானுக்கு திருக்கல்யாணம் பண்ணி
கண்குளிர பார்க்காமலா போகிறோம்
வயதாகி விட்டதே என்று சொல்லி
வாழ்ந்தது போதும் போகலாம்
என்றா மனதில் நினைக்கிறோம்
இப்படி எல்லாம் இல்லாதபோது
வயதாகிவிட்டதென பம்மாத்து காட்டி
பகல் வேடம் போடுவதும் ஏனோ
பரம்பொருளை துணைக்கழைத்து
பக்குவமாய் நடிப்பதும் ஏன்தானோ
பார்ப்பவர் மெச்சிடவா பரந்தாமா!

![]()