ஈழத்தமிழர்களுக்கான நீதிக்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு ஆதரவு!

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹெர்ப் கொனாவே (Herb Conaway) எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “17 ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்கா உள்நாட்டுப் போரின் இறுதிச் கட்டத்தில் கொல்லப்பட்ட அல்லது வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூருவதில் நியூ ஜெர்சி மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் அமெரிக்கர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.
இனப்படுகொலை
தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் பாதிக்கப்பட்டவர்களை நாம் மதிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நீதியான மற்றும் நிரந்தரமான அரசியல் தீர்வைத் தான் தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மற்றொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான டெபோரா ரோசும் (Deborah Ross) பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் சிறிலங்காவின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது துயரமான முறையில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுடன் நானும் இணைகிறேன்.
இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் இந்தத் துயரத்தை நாம் அங்கீகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சர்வதேச அளவில் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()