இலங்கை

நந்திக் கடலை செங்கடலாக பார்த்த இந்த உலகம்..!; முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் தமிழக இயக்குனர்

18 வது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் விடியலுக்கான ஒரு தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் இயக்குனர் வடமலை கௌதமன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட இனவழிப்பு நடந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிலையிலும் ஒரு கீற்று, சிறு வெளிச்சம் கூட இல்லாமல் தமிழினம் ஒவ்வொரு ஆண்டினையும் கடந்த வண்ணம் உள்ளது.

எனது தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான தேசிய தலைவர் மேதகு ஆண்ட அந்த உன்னத சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தவாறு உள்ளது.

அந்த அறம் மிக்க நிலத்தில் சிங்கள குடியேற்றங்களால் பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன. ஆனால் உலகம் முழுவதும் வாழும் தமிழினம் ஒரு தீர்க்கமான, அல்லது தீவிரமான முன்னெடுப்புகளை செய்யாமல் ஒரு உறக்க நிலையில் தான் இருக்கிறது என்றுதான் நான் நம்புகிறேன்.

தீர்வு திட்டத்துக்கான முன்னெடுப்பு ஒரு தகிப்புடன் இடம்பெறுவதாக எனக்கு தெரியவில்லை. அந்த இனவழிப்பு நடந்த காலப்பகுதியில் நாங்கள் மிகப்பெரும் போராட்டங்களை கல்லூரி மாணவர்களுடன் இணைந்து முன்னெடுத்தோம்.

அதனால் இன்றும்கூட வழக்குக்காக நீதிமன்றங்களுக்கு அலைந்த வண்ணம் இருக்கிறோம். 20ற்கும் மேற்பட்ட ஆவண காட்சிகளை நான் தயாரித்துள்ளேன்.

உடைந்துபோன, நார்நாராக கிழிந்துபோன பிஞ்சுகளினதும், பெண்களினதும், என பலரது உடல்களை உள்ளடக்கி தொகுத்து தொகுத்து, தொடுத்து தொடுத்து ஆவணப்படம் தயாரித்து ஒரு பைத்தியம் ஆகின்ற மனநிலைக்குள் தள்ளப்பட்டேன்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற எனக்கே இந்த தகிப்பு இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு எவ்வளவு இருக்கும்.

ஏன் இதுவரை ஒன்றாக நிற்கவில்லை? ஏன் ஒன்றாக ஒரு வியூகத்தை எடுக்கவில்லை? இதெல்லாம் வெறும் புலம்பலல்ல, பெரு வலி. 17 ஆண்டுகள் கடந்த நினைவேந்தல்கள், மாவீரர் தினங்கள் உள்ளிட்ட இடத்தில் நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் நிற்கிறோம். அழுகிறோம். ஆனால் ஒரு தீர்வினை நோக்கி மட்டும் செல்லவில்லை.

இது 17 ஆண்டுகள் கடந்து, 50 ஆண்டுகள் கடந்து, 100 ஆண்டுகள் கடந்து ஒரு சடங்காகவே போய்விடுமோ என்று கவலையாக உள்ளது.

பல்லாயிரக்கணக்கான போராளிகள், இலட்சக்கணக்கான மக்கள் அந்த கொடிய யுத்தத்தில் மடிந்தார்கள். உலகத்தில் எந்த ஒரு இனமும் இந்தளவுக்கு நேர்மையாக போராடி இருக்காது. எந்தவொரு இனமும் இந்தளவு இரத்தத்தை ஒரு இடத்தில் சிக்கியிருக்காது.

நந்திக் கடலை செங்கடலாக இந்த உலகம் பார்த்தது. 2008ஆம் ஆண்டு நான் தயாரித்த முதல் ஆவணப் படத்தின் பெயர் “இனி என்ன செய்யப் போகிறோம்”.

17 ஆண்டுகளுக்கு பின்னரும் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற அந்த ஒற்றை கேள்வி மட்டுமே எங்கள் கண்முன்னாடி நிற்கிறது.

ஆகவே பழையதை பழுது பார்க்கின்றது தான் இனி தமிழனுக்கு புதிய ஒரு வாசலை, விடியலை, ஒரு வெளிச்சத்தை, ஒரு விடுதலையை கொடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 18வது ஆண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் ஒரு விடியலுக்கான தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகத்துக்கு நாங்கள் சொல்வோம்.

விடுதலை போராட்டத்தில் இழந்தவை ஒரு இழப்பல்ல என்று பல நாடுகளின் வரலாறுகள் சொல்லியிருக்கின்றன.

ஆக பல்லாயிரக்கணக்கான மாவீரர் தெய்வங்களின் பேரிழப்பும், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களின் அந்த பறிகொடுப்பும் தமிழினத்துக்கான விடுதலைக்கான செயலாக இருக்கட்டும்.

எதிர்க்க துணிந்தால் தமிழ் வெல்லும், எதற்கும் துணிந்தால் மட்டுமே தமிழால் வெல்வோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button