தொழிலாளராய் இணைவோம்… கவிதை… சி.ரஞ்சிதா

ஜகம் இயங்கிடுதல்
தொழில்களினால் கண்டீரோ!
இங்குப் பிரிவினை
என்னும் ஏற்றத் – தாழ்வு
தொழிலாளர் பூண்ட
அணிகலன் உணர்ந்தீரோ!
குப்பை கூட்டி அள்ளுபவனும்
செருப்பு தைத்து தருபவனும்
கூலித் தொழில் கொண்டு
குலம் காப்பவனும்
விளை நிலம் காத்து
உணவளிப்பவனும்
தீண்டத்தகாதவன் என்னும்
மமதை அழியவில்லையே
ஏன்…?
எல்லோரும் பட்டம் பெற்றால்
பாதை சுத்தம் செய்பவர்
யார்?
சிம்மாசனத்தில் அமர்ந்து
ஆட்சி புரிந்தால்
மற்றயத் தொழில்
இயக்குபவர் யார்?
யுகம் கடந்து நிதம்
வந்துவிட்டோம்!
கல்விப் படி ஏறி விட்டோம்!
ஆனால் அறிவில் தோற்றுவிட்டோம்!
ஏ.சி.உடுத்து , ஆங்கிலம்
பூசியவனுக்கும்
வெயில்,மழை உடுத்து
தாய்மொழி பாடியவனுக்கும்
அச்சு நோட்டுக்கள் வேறில்லை!
குடல் தீண்டும் பசியிலும்
பேதமில்லை!
உடல் கொண்டு ஓடும்
குருதியும் நிறம்
போவதில்லை…!
உழைப்பைச் சுரண்டும்
சோம்பேறிகள் உன்
தகுதி பார்ப்பதில்லை…!
உறங்குவது போல்
நடிப்பவன் ஒருபோதும்
விழிப்பதே இல்லை…!
நிதம் நிதம்
தொழில் பிரிவினைப்
பேசுவதிலோர் மகிமை
இல்லை !
நாம் தொழிலாளர்
என்பது போல்
இன்பம் வேறேதும் இல்லை!
![]()