நாகபட்டினத்திலிருந்து யாழ்.பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

யாழ்.காங்கேசன்துறைக்கும் தமிழகம் நாகப்பட்டினத்துக்குமிடையே பயணிகள் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அந்த கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் ஒரு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
மோசமான வானிலை காரணமாக, கடந்த சனிக்கிழமை (09) சிவகங்கை கப்பலின் இயந்திரம் பழுதடைந்தது. இந்த கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த வேளையில், சிவகங்கை கப்பலில் இயந்திர கோளாறு குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினருக்கும் நாங்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்து, அவர்களின் உதவியைக் கோரினோம்.
மேலும், இந்த சமயத்தில், பயணிகளைப் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் மீட்பதை உறுதிசெய்யும் வகையில், எங்கள் நிறுவனமும் துறைமுக அதிகாரிகளும் இணைந்து இரண்டு பெரிய இயந்திரப் படகுகளை மீட்புப் பணிக்கு அனுப்பி வைத்தார்கள்.
அந்த படகுகளில், பயணிகள் பாதுகாப்பாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
அத்துடன், பயணிகளுடன் கப்பல் பணியாளர்களும் துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், யாரும் அச்சப்பட தேவையில்லை எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()