பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது ; என்னை எவ்வளவு அலைக்கழித்தாலும், நான் சோர்ந்துபோகப் போவதில்லை

ரங்க ராஜபக்சவின் மரணம் சந்தேகத்துக்குரியது என அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாகத் நான் குறிப்பிட்ட கருத்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ கடிதத்தை அடிப்படையாகக் கொண்டது. பெலவத்தையில் இருக்கும் பூஜ்ஜிய பிரஜையின் அரசியல் உத்தரவின் பேரிலேயே தன்னிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.அரசியல் பகுப்பாய்வு
குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பாக அவரது மனைவி சந்தேகம் தெரிவித்திருப்பதாகவும், மரணம் சந்தேகத்திற்குரியது என்று மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக நான் பகிரங்கப்படுத்திய விவகாரம் தொடர்பாக, என்னிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார்கள்.
உண்மையில் அவ்வாறானதொரு ஒரு வாக்குமூலத்தை அவரது மனைவி பொலிஸாருக்கு வழங்கவில்லை என்றும், நான் எவ்வாறு அப்படி ஒரு கருத்தைக் கூறினேன் என்றும் பொலிஸார் என்னிடம் அறிந்துகொள்ள விரும்பினர்.
அதன்படி, இந்தக் கூற்றை நான் கூறவில்லை என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினேன். நான் இந்தக் கூற்றை மேற்கோள் மட்டுமே காட்டினேன். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மரண பரிசோதனைக் குழுவை நியமிக்கும் நியமனக் கடிதத்தில்; வேறு எங்கும் அல்ல, இந்த மரணம் தொடர்பாக நியமிக்கப்படும் நியமனக் கடிதத்திலேயே ‘மரணம் சந்தேகத்திற்குரியது என மனைவி முறைப்பாடு செய்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஆங்கிலத்தில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆங்கிலம் விளங்கும். ஆனால், பெலவத்தையில் இருக்கும் பூஜ்ஜிய பிரஜைக்குத்தான் ஆங்கிலம் விளங்கவில்லை. ஜனாதிபதி இதுவரை நாட்டின் முதலாம் பிரஜையாக இருந்தார். முதலாம் பிரஜைக்கு மேல் யாரும் இருந்ததில்லை. ஆனால், இப்போது முதலாம் பிரஜைக்கு மேல் பெலவத்தையில் ஒரு பூஜ்ஜிய பிரஜை இருக்கிறார். எனவே, அந்தப் பூஜ்ஜிய பிரஜையின் உத்தரவின் பேரில் தான் வாக்குமூலம் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதனால் நாங்கள் பொலிஸாருக்கு ஆங்கிலத்தில் என்ன இருக்கிறது, அதைச் சிங்களத்தில் மொழிபெயர்த்தால் என்ன அர்த்தம் வரும் என்பதை விளக்கினோம். இதைச் சாதாரண நபர் யாரும் கூறவில்லை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே கூறியுள்ளார். அவர்தான் மரண பரிசோதனைக் குழுவை நியமிக்கும் நியமனக் கடிதத்தில் இதைக் குறிப்பிட்டிருந்தார் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம். மேலும், இந்த மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான ஐந்து காரணங்களை முன்வைத்தோம்.
அதில் ஒரு காரணம், மனைவி முறைப்பாடு செய்யவில்லை என்று கூறப்பட்டதாகும். மனைவி அவ்வாறு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனைவியின் மனநிலையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, அதை நாங்கள் மதிக்கிறோம். தந்தையை இழந்த பிள்ளைகள் இருக்கும் ஒரு தாய், பிள்ளைகளுக்குத் தாயும் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, மிகவும் கவனமாகத்தான் எந்தவொரு தாயும் தனது பிள்ளைகளைப் பற்றி யோசித்துச் செயல்படுவார். அவரது அந்த நிலைப்பாட்டையும், கருத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
இருப்பினும், ஒரு மரணம் குறித்துச் சந்தேகம் எழுப்புவதற்கு மனைவி மட்டுமே தகுதியானவர் அல்ல. நாட்டின் எந்தவொரு நபருக்கும் ஒரு மரணம் குறித்துச் சந்தேகம் ஏற்படலாம். அதற்கான காரணங்களைப் பொலிஸாருக்குத் தெரிவிக்கலாம். அந்த வகையில், இந்த மரணம் தொடர்பாகச் சமூகத்தில் இருக்கும் சந்தேகங்களையும், அதற்கான காரணங்களையும் நாம் பொலிஸாரிடம் சமர்ப்பித்தோம். அதேபோன்று, மரண பரிசோதனைக்கும் என்னைச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
குளியாப்பிட்டிய பொலிஸார், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவைப் போல் செயல்படாமல் இருப்பது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கபில சந்திரசேன இறப்பதற்கு முன்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தன்னைத் தூக்கிலிடுமாறு அச்சுறுத்தியதாகத் தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார். அதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எம்மை அலைக்கழித்து, சோர்ந்துபோகச் செய்ய முயற்சி செய்கிறது. ஆனால், அரசாங்கம் எம்மை எவ்வளவுதான் அலைக்கழித்தாலும், நாங்கள் சோர்ந்துபோகப் போவதுமில்லை, எங்களின் இந்தப் பயணத்தை நிறுத்தப் போவதுமில்லை என்பதை மிகவும் நம்பிக்கையுடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.
![]()