இலங்கை

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் : உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக சிங்கள விவசாயிகளின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியல் சூழ்ச்சிகளினாலும், பொய்களினாலும் ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டை ஒரு தேசமாக முன்னோக்கி நகர்த்த வேண்டுமானால், உண்மையான தேசப்பற்றுள்ள ஒரு தலைமைத்துவம் அவசியமாகும். அந்த வகையில், திலித் ஜயவீரவே எதிர்காலத்தில் இந்நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தகுதியுள்ள ஒரே தலைவர் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை எல்லைப்பகுதியான தொப்பிகல, திவலபத்தான பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிங்கள விவசாயிகள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வெள்ளிக்கிழமை (8) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதால் எவரும் அச்சப்படத் தேவையில்லை. ஒரு தேசமாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், கலாசாரமும் ஒழுக்கமும் உள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் மத்திய வங்கிக் கொள்ளை முதல் பல மோசடிகள் வரை இடம்பெற்று, மக்கள் இன்று நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு சீரழிந்த கலாசாரத்தை மாற்றி அமைக்க நாம் உயிரைத் தியாகம் செய்தாவது பாடுபடுவோம்.

தற்போது அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சிறந்த அடையாளமாக திலித் ஜயவீரவை நான் காண்கின்றேன். நான் ஒரு ராஜபக்ச நிக்காயவைச் சேர்ந்த தேரராக இருந்தபோதிலும், தற்போதைய அரசியல் சூழலில் நாட்டைப் பொறுப்பேற்கக் கூடிய ஒரு வலுவான தலைவராக அவர் தென்படுகிறார். எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் நாட்டுக்கு ஒரு விமோசனம் கிடைக்குமானால், அது திலித் ஜயவீர போன்ற தலைவர்களாலேயே சாத்தியமாகும்.

அதேவேளை, தொப்பிகல மேய்ச்சல் தரை விவகாரத்தில் இன்று கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் கொண்டாட வேண்டும். கடந்த 30 வருட கால யுத்தத்தினால் சிங்கள மக்கள் தமது பூர்வீக விவசாய நிலங்களை இழந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்றவர்கள் இது அவர்களின் மேய்ச்சல் தரை எனக்கூறி, பல்வேறு வாதங்களை முன்வைத்து இந்த நிலங்களை அபகரிக்க முயற்சித்தனர். எனினும், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் ஊடாக, இன்று இந்த நிலங்கள் மீண்டும் விவசாயிகளுக்கே கிடைத்துள்ளன.

நீதிமன்றம் உரிமையை வழங்கியிருந்தாலும், இந்த நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் தேவையான உரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும். இன்று நாட்டில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத வறுமை நிலை காணப்படுகிறது. எனவே, இந்த நிலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்து, நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய திம்புலாகல ஆரண்ய சேனாதிபதிய திம்புலாகல ராகுலலங்கார தேரர் குறிப்பிடுகையில்,

தொப்பிகல திவலபத்தான பகுதியில் காலங்காலமாக விவசாயம் செய்த விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலையீட்டினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு எதிராக பெங்கமுவே நாலக தேரர் மற்றும் செனவிரத்ன உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தை நாடினர். அதன் பலனாக தற்போது விவசாயிகளுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

இன்று பெங்கமுவே நாலக தேரர், அநுராதா யஹம்பத் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து, எதிர்வரும் பெரும் போகத்தில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்துக் கலந்துரையாடினோம்.

மகாவலி அதிகார சபையின் வதிவிட முகாமையாளருடன் இது தொடர்பாகப் பேசி, விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், விளைச்சலை விற்பனை செய்வதற்குத் தேவையான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று வெற்றியானது இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button