இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு இடைநிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினத்துடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு மனித எலும்பு கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூடுகளில் 5 அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 261 மனித எலும்புகூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதி ஒன்றின் மண்டையோடு பகுதி மாத்திரம் வெளி தெரிந்த நிலையில், அது இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 21 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி, நாணய குற்றிகள், ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 1ஆம் திகதி மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அந்த பணிகள் இடம்பெறும் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button