தமிழக முதல்வர் எடப்பாடி? விஜய்க்கு விழுந்த பேரிடி

தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக நீடித்து வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ரிசார்ட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்றுள்ளார்.
அங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது, “நாளைய தமிழக முதல்வர் எடப்பாடியார்” என அதிமுகவினர் முழக்கமிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெறத் தவறியுள்ளது. இதையடுத்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்.என். அர்லேகரிடம் உரிமை கோரியிருந்தார்.
எனினும், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் விஜயிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியுள்ள நிலையில், அவை இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இந்தச் சூழலில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி அரசியல் பரபரப்பை அதிகரித்தன.
ஆனால், தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக எந்தவித இடையூறும் செய்யாது என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு முதல் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று அவர்கள் புதிய ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு 40 பேர் தங்கும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தவெக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிமுகவின் ஒரு பகுதி உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு வழங்கலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.
அத்தகைய சூழ்நிலையைத் தடுக்கும் நோக்கிலேயே அதிமுக தலைமையகம் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![]()