13வது திருத்தச் சட்டம்,மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்; கனேடிய, பிரித்தானியத் தூதர்களுக்கு விளக்கிய திருமலை மாநகர முதல்வர்

கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோர் திருகோணமலை மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பில் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா,பிரதி முதல்வர் ஜனாப் மௌசூம் மாநகர ஆணையாளர் உ.சிவராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது., திருகோணமலை மாநகரத்தின் தேவைகள் எதிர்கால அபிவிருத்தி நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் ஜனநாயக சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாநகர உட்கட்டமைப்பு வசதிகள்,சுற்றுலா அபிவிருத்தி,இளைஞர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து கலந்துரையாரப்பட்டது.
முக்கியமாக 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மீனவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள், வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற பல முக்கிய விடயங்களையும் எடுத்துரைக்கப்பட்டது.
![]()