உள்ளே செல்லப் போகும் முன்னாள்கள் யார்?; பட்டியலை வெளியிட்ட நளிந்த

எதிர்காலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள மற்றும் தீர்ப்புகள் வழங்கப்படவுள்ள வழக்குகளுடன் தொடர்புடைய ராஜபக்ஷக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டார்.
மேதினத்தில் ஜனாதிபதி அநுர குமாரவினால் குறிப்பிடப்பட்ட வழக்கு தீர்ப்புகள் தொடர்பான கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாயாக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் குறித்த பெயர்களை வெளியிட்டார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றின் தீர்ப்பு மே மாதம் 8ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஏஎச்எஸ் பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு மே 15ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளவர்களின் பெயர்களை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன். அதாவது விமல் வீரவன்ச, பிரியங்கர ஜயரத்ன, ராஜித சேனாரட்ன, ரவி கருணாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஜின்வாஸ் குணவர்தன, சாமர சம்பத், சரண குணவர்தன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மேர்வின் சில்வா, நாமல் ராஜபக்ஷ, சஷிந்திர ராஜபக்ஷ, சம்பிக்க ரணவக்க, யோசித ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் வழக்குகள் உள்ளன. அதற்கான தினங்கள் உள்ளன. இதனை பார்த்துக்கொண்டிருந்தால் வழக்கு தினங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் பொதுவான அறிவு இருக்குமாக இருந்தால் தீர்ப்பு எப்படி வரும் என்று கூறலாம். இவ்வாறு சாதாரண அறிவில் ஜனாதிபதி கூறியிருக்கலாம். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது.
திருடர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றனர். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடக்கின்றன. திருடர்கள் உள்ளே போக வேண்டும் என்று கூறுகின்றனர். வழக்குகள் வேகமாகி தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும் போதும் மக்கள் அதில் திருப்தியடைவர். கிடைத்த மக்கள் ஆணையை மக்கள் புரிந்துகொண்டுள்ளார். அந்த ஆணைக்கு அமையவே ஜனாதிபதி நடந்துகொள்கின்றார் என்றார்.
![]()