நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்

அட்லாண்டிக் பெருங்கடலில் 150 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் மூன்று பேர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய அரிய வகை நோயான ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) பாதிப்பு இவர்களில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அர்ஜென்டினாவின் உசுவாயாவிலிருந்து (Ushuaia) கேப் வெர்டே (Cape Verde) நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற கப்பலில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, சுகாதாரப் பிரிவினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐந்து பயணிகளுக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
“பாதிக்கப்பட்ட ஆறு நபர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று WHO கூறியுள்ளது.
மேலும், “கூடுதல் ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நோய்ப்பரவல் குறித்த விரிவான புலனாய்வு உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவக் கண்காணிப்பும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன. வைரஸின் மரபணு வரிசைமுறை (Sequencing) குறித்த ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிப்பு அறிகுறிகள் தென்படும் மற்ற இரண்டு பயணிகளை வெளியேற்றுவதற்காக (Evacuate) சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் WHO சேர்த்துக் கொண்டுள்ளது.
![]()