இலங்கை

ஒரே நாளில் 21 மாவட்டங்களில் பேரணிகள் – மே தினத்தில் புதிய வரலாறு படைக்கத் தயாராகும் NPP

“சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது” என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது குறித்து ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பில் மாத்திரம் பிரதான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, மக்களின் நலன் கருதி மாவட்ட ரீதியாகப் பேரணிகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து நுவரெலியாவில் நடைபெறும் விசேட மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார். இக்கூட்டத்தில் பதுளை மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மக்களும், வன்னியை மையப்படுத்தி வவுனியாவில் நடைபெறும் கூட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையின் மே தின வரலாற்றில் அரசியல் கட்சியொன்று ஒரே நாளில் 21 மாவட்டங்களில் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்துவது இதுவே முதன்முறையாகும், இம்முறை பெருந்திரளான மக்கள் அணிதிரள்வார்கள்.” – என்றும் ரில்வின் சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *