இலங்கை

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வந்துள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தமது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்று வாக்கு மூலம் அளிக்க இராமநாதன் அர்ச்சுனா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

அதேவேளை, குறித்த சம்பவத்தில் தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து, தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பெண்ணொருவர் கைதானார்.

அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *