இலங்கை

110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்  (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே
அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்தேகநபர்கள், அனுசரணையாளர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டுகளின் மூலம் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும் என்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இதுவேயாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள்   (26) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *