இலங்கை

தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எழுத்துமூல ஒப்புதலைப் பெற சட்டத்தரணிகள் பேரவை முயற்சி

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத் தயாரிப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டவும், அரசுடனான பேச்சுகளின் போது அந்த ஆவணத்தையே அடிப்படையாகக் கொள்ளவும் சகல கட்சிகளிடமிருந்தும் எழுத்துமூல ஒப்புதலைப் பெறத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசித்து வருகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இப்பேரவை ஈடுபட்டுள்ள நிலையில், அண்மைக்காலமாக எழுந்துள்ள முரண்பாடுகளைத் தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சந்திப்புகளில் பொது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

இருப்பினும், கடந்த 15 ஆம் திகதி ‘தமிழ்த் தேசியப் பேரவை’ (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) தனித்துவமாகச் செயற்பட்டு 28 பேரடங்கிய வழிநடத்தல் குழுவை நியமிப்பதாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பையடுத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

“பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை அரசுடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்த நிலையில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் இந்தத் தனிப்பட்ட நடவடிக்கை ஒற்றுமை முயற்சியைக் குழப்புவதாக அமைந்துள்ளது” என்று தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியிருந்தது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தங்களது கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும், தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விடயங்களில் இரகசியத்தன்மை அவசியமில்லை என்பதால் தமது கூட்டு நடவடிக்கை தொடரும் எனவும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையிடம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான மாறுபட்ட நிலைப்பாடுகளால் ஒற்றுமை முயற்சிக்குக் குந்தகம் ஏற்படுவதைத் தடுக்க, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை பின்வரும் தீர்மானங்களை எழுத்துமூலம் உறுதிப்படுத்த முயல்கின்றது.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தயாரிக்கும் அரசியல் தீர்வு ஆவணமே இறுதியானது மற்றும் மேலோங்கியது என்பதை ஏற்றுக்கொள்வது.

அரசுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு பேச்சும் இந்தத் கூட்டு ஆவணத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது.

சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் இந்த ஒற்றுமை முயற்சியில் உண்மையான அர்ப்பணிப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தவே இந்த எழுத்துமூல ஒப்புதல் பெறப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *