2.5 மில்லியன் டொலர் ஹேக்கர்களுக்குப் பலி: ‘ஸ்மார்ட்’ அரசாங்கத்தின் இலட்சணம் இதுவா? – சஜித் பகிரங்கக் கேள்வி

டிஜிட்டல் நாட்டை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ‘திசைகாட்டி’ அரசு, நாட்டின் 2.5 மில்லியன் டொலர் வரிப்பணத்தை ஹேக்கர்களுக்குப் பூஜை செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடினார்.
விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை ஹேக்கர்களால் சுருட்டப்பட்ட விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார்.
“மக்களின் வரிப்பணமான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஜனவரி மாதமே நடந்துள்ளது. இதற்காக மார்ச் மாதம் ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில், நேற்றுமுன்தினம் பொதுவெளியில் இந்தத் தகவல் கசியும் வரை, அரசும் நிதி அமைச்சும் இதனை இரகசியமாக வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதி அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்துக்கு இதனைத் தெரிவிக்காதது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் வெளிநாட்டு மூலவளத் திணைக்களம் ஆகியவற்றுக்குக் கடன் செலுத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர், முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வங்கிப் பரிவர்த்தனைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் மற்றும் ‘வைட் லிஸ்டட்’ நடைமுறைகளை நிதி அமைச்சு ஏன் பின்பற்றவில்லை? இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், பாதுகாப்பு நடைமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவின் நம்பகத்தன்மை குறித்தும் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
“குற்றம் சாட்டப்பட்ட அதே நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்டே விசாரணைகளை நடத்துவது எந்த வகையில் நியாயம்? பொதுநலவாய விருதைப் பெற்ற ஒரு நிறுவனம், இவ்வளவு பெரிய தொகையை ஹேக்கர் ஒருவரின் கணக்குக்கு மாற்றியது வியப்பளிக்கின்றது. எனவே, இது குறித்து வெளிப்படையான, நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
![]()