உலகம்

பாப்பரசரின் விமர்சனமும், ட்ரம்ப்புடனான மோதலும் ; பாப்பரசர் விடுத்த அதிரடி அழைப்பு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது ஆபிரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் ரோம் நகர் நோக்கிப் பயணித்த வேளையில், விமானத்தில் இருந்தவாறு பரிசுத்த பாப்பரசர் கருத்துத் தெரிவித்தார்.

இந்த மோதல் காரணமாக ஈரானில் உள்ள ஒட்டுமொத்த அப்பாவி மக்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அமைதியை மேம்படுத்தவும், போர் அச்சுறுத்தலை நீக்கவும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கவும் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற முயற்சியை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஈரானில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளைத் பரிசுத்த பாப்பரசர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதன் காரணமாக, அவருக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நிலவும் மோதல்கள், தற்போது நீடிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் மூலம் முழுமையாக முடிவுக்கு வரும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் டெனி டெனன் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள 10 நாள் போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பதாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்ததைத் தொடர்ந்தே தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய போர் நிறுத்த உடன்படிக்கையானது நூறு சதவீதம் வெற்றியளிக்கும் ஒன்றாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *