இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் அரசியல் சதி இல்லை; அரசு மக்களை ஏமாற்றுகிறது!; சரத் வீரசேகர காட்டம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல் சதி அல்ல. அது ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளின் செயல். ஒரு ‘மகா சூத்திரதாரி’ இருப்பதாகக் கூறி தற்போதைய அரசு மக்களை ஏமாற்றுகிறது” என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினமான  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 79 பேருக்கு எதிராக 25 வழக்குகள் நடைபெற்று வருகின்றன என்றும் சுட்டிக்காட்டிய அவர், அரசு தனது அரசியல் தேவைகளுக்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது என்றும் சாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், திறமையான புலனாய்வு அதிகாரியான சுரேஷ் சலேயைப் பழிவாங்கும் நோக்கில் அரசு செயற்படுகின்றது. தாக்குதல் நடந்த காலப்பகுதியில் அவர் வெளிநாட்டில் இருந்தபோது, அவரை இதனுடன் தொடர்புபடுத்துவது அநீதியானது.

சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளில் எங்குமே இது ஓர் அரசியல் சதி எனக் கூறப்படவில்லை.

சஹ்ரான் வெளியிட்ட வீடியோவில் இது இஸ்லாமிய அரசுக்காகவும், நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கவுமே நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. உண்மைகளை மறைத்து இது சதி எனக் கூறுவது மீண்டும் தீவிரவாதக் கொள்கை வளரவே வழிவகுக்கும்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமை மற்றும் போரை வெல்ல உதவிய அதிகாரிகளை இலக்கு வைப்பது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், அரசு குறுகிய அரசியல் இலாபம் தேடுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

சஹ்ரானுக்கு எதிராகப் பிடியாணை இருந்தும் அதனைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தாமல், இது ஒரு சதி எனக் கூறுவது வேடிக்கையானது எனவும், இது கத்தோலிக்க மக்களிடையே தேவையற்ற வெறுப்பை உருவாக்குவதாகவும் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *