உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் மயமாக்கிவிட்டது; நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம் முழுமையாக அரசியல் மயமாக்கிவிட்டது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற புதுவருட நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம் முழுமையாக அரசியல் மயமாக்கிவிட்டது. ஒருபுறம் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். இவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் வேறு சம்பவமொன்று தொடர்பிலேயே பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று இப்போது அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக பணியாற்றிய சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை மறைத்து வைத்திருந்த இருவரே அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் இருவருமே நிலக்கரி தொடர்பிலும் விசாரணை நடத்தகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எங்களிடம் கேள்வியெழுப்புவதை விடவும் ஜே.வி.பியிடமே கேட்க வேண்டும். தாக்குதலின் பின்னால் பிரதான சூத்திரதாரி இருக்கின்றார்கள்.
ராஜபக்ஷக்கள் இருக்கின்றனர் என்றெல்லாம் கூறுகின்றனர் என்றால் அது தொடர்பில் இப்ராஹிமிடம் கேட்கலாம்தானே. அவரின் பிள்ளைகள் இருவரும் எதற்காக பயங்கரவாதிகளாகினர் என்று கேட்கலாம்தானே என்றார்.
![]()