இலங்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இன்று பிரார்த்தனை; நீதி கோரி ஏப்ரல் 21 கட்டுவாப்பிட்டியில் மக்கள் பேரணி!

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்று உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சியாளர்களாக வத்திக்கான் அங்கீகரித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கத்தோலிக்கர்களும் தமது குடும்பங்களில் விசேட வழிபாடுகளை நடத்தி, உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், உண்மையும் நீதியும் விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டியும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) நாடு முழுவதிலுமுள்ள தேவாலயங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய காலை 8:45 மணிக்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில் அனைத்துத் தேவாலயங்களிலும் ஒருமுறை மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். காலை 8:47க்கு மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகள் ஏற்றி வைக்கப்படும். காலை 8:50க்கு விசேட ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறும்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் உதவி ஆயர் அன்டன் ரஞ்சித் ஆகியோரின் தலைமையில் நினைவேந்தல் நடைபெறும். இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களின் விசேட உரைகளும் இடம்பெறவுள்ளன.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆயர் மெக்ஸ்வெல் சில்வா மற்றும் ஆயர் ஜே.டி. அந்தோனி தலைமையில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். காலை 8:45 மணிக்கு உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும்.

அன்று மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து நீதி மற்றும் உண்மை வேண்டி மாபெரும் பிரார்த்தனைப் பேரணி ஆரம்பமாகும். இந்தப் பேரணி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்ததும், இலங்கையின் அனைத்து ஆயர்கள் இணைந்து விசேட ஆசீர்வாத வழிபாடுகளை முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button