இலங்கை

நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – அணிதிரளுமாறு போராட்டக் குழு அழைப்பு

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 2026.04.24 முன்னெடுக்கப்படவுள்ளதாக கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த குறித்த குழு மேலும் கூறுகையில் – நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட எமது அழகிய தீவு, நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பது எமது மக்கள் அனைவரும் அறிந்ததே!

நெடுந்தீவில் சராசரியாக 1418 குடும்பங்கள் வாழ்கின்றனர். அவர்களுள், இதுவரைகாலமும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு 688 குடும்பங்களுக்கே வழங்கப்படுகின்றது.

தற்போது 200 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், மீதமுள்ள 488 குடும்பங்களுக்கு நெடுந்தீவு மேற்கு சாராப்பிட்டியில் இருந்து நீர் வழங்கப்படுகின்ற போதும், அந்நீர் பயன்படுத்த முடியாத நிலையில் உவர்த்தன்மை கொண்டதாக காணப்படுகின்றது.

இதை விட மீதமுள்ள 730 குடும்பங்களின் வீடுகளுக்கு நீர் இணைப்பு இல்லாத நிலையில், அவர்களும் சாராப்பிட்டி நீரையே நம்பியிருக்கின்றனர்.

சாராசரியாக ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான நீர் சாராப்பிட்டியில் இருந்து நுகரப்படுகின்றது. கடந்த வருட இறுதியில் சராசரிக்கும் மிக அதிக அளவில் மழை பெய்து, மூன்று மாதங்கள் கடப்பதற்குள் சாராப்பிட்டி நீர் உவர் நீராக மாறியமை, ஒரு முறையற்ற ‘நீர்ச் சுரண்டல்’ இடம்பெறுவதையும், நன்னீருடன் கடல் நீர் கலந்து நிலத்தடி நீர் ஆபத்தான கட்டத்திற்குள் உள்ளமையையும் கோடிட்டுக்காட்டுகின்றது.

நெடுந்தீவின் கடல் போக்குவரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய பாரிய கடப்பாடு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உள்ளது. குமுதினி, வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய மூன்றுகடற் கலன்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரியதாகும்.

அதில் வடதாரகை திருத்த வேலைக்காகக் கொண்டு சென்றுள்ள நிலையில், நெடுந்தாரகை பழுதடைவது மீண்டும் ஓடுவது என நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி
50வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்ட குமுதினி கடந்த மூன்று மாதங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது தொடக்கம் இன்று வரை நான்கு தடவைக்கு மேல் குமுதினி திருத்த வேலைக்காகக் கொண்டு செல்லப்பட்டு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, நாளாந்தம் 100பேருக்கும் அதிகமான அரச ஊழியர்கள் நெடுந்தீவுக்கு வருகை தருகின்றனர். ஊர் மக்கள் நாளாந்தம் பயணம் செய்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தனியார் படகுகளும் இங்கு பலமான நிலையில் இல்லை.

எனவே, கடற்போக்குவரத்தில் திருப்பதியான சேவையை வழங்க வேண்டிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பற்ற, மனிதாபிமானமற்ற, செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, துறைமுகத்திலும், கப்பல்களிலும் பயணம் செய்யும் எமது மக்கள் இம்சிக்கப்படும் செயலை வெறுக்கின்றோம்.

இந்த நிலையில் நெடுந்தீவில் உள்ள மக்கள் மற்றும் மக்களைப் பல்வேறு வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேலைத் திட்டத்திற்குள் செல்ல வேண்டிய வரலாற்றுத் தேவை உருவாகியுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி, பொறுப்புக் கூற வேண்டிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை வலியறுத்தி 2026.04.24 அன்று வெள்ளிக்கிழமை ஜனநாயக விழுமியங்களை அடியொற்றி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கமைப்பட்டுள்ளது என்பதை நெடுந்தீவிலும், நெடுந்தீவுக்கு வெளியிலும் வசிக்கின்ற எமது மக்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களுக்கும் நாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றோம்.

இச்செயற்பாட்டுக்கு பூரண ஆதரவு வழங்குமாறு எமது மக்களை நாம் வினயமாக கேட்டுநிற்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *