துருக்கியில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆறு பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், தாக்குதலின் பின்னர் அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு பாடசாலையில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்திருந்தனர்.
தாக்குதலை நடத்திய 18 வயதுடைய இளைஞன் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()