உலகம்

எங்களை சரணடைய வைக்க முயல்வது தோல்வியையே தரும்: ஈரான் அதிபர் திட்டவட்டம்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.

இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், கடந்த இரு நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஈரான் அரசு ஊடகமான ஐஎஸ்என்ஏ-வில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறோம். ஆனால் சரணடைய நிர்பந்திப்பதை ஏற்க மாட்டோம். ஈரானை சரணடைய வைக்கவோ அல்லது ஈரான் மீது பலத்தை திணிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். மக்களும் அத்தகைய அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈரான் ஒருபோதும் போரை நாடவில்லை

எங்கள் நாட்டின் மீதான தாக்குதல் எந்த அதிகாரத்தின் பேரில், எந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்டது? சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோரைக் குறிவைத்து தாக்கவும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய மையங்களை அழிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து தாக்​குதல் நடத்​தின. இதற்கு பதிலடி தரும் வகை​யில் வளை​கு​டா​வில் உள்ள அமெரிக்​கா​வின் நட்பு நாடு​கள் மற்​றும் இஸ்​ரேல் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இந்த நிலை​யில் அமெரிக்கா மற்​றும் ஈரான் இடையே போர் நிறுத்​தம் செய்ய பாகிஸ்​தான் மத்தியஸ்தம் செய்​தது. இதனால் 2 வார காலம் இடைக்​கால போர் நிறுத்​தம் அமலானது.

இந்த போர் நிறுத்​தம் 21-ம் திகதி​யுடன் முடிகிறது. அதற்​குள் நிரந்தர போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்பட பல்​வேறு தரப்பினர் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். அதன்​படி, கடந்த சனிக்​கிழமை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் இடையே பேச்​சு​வார்த்தை நடைபெற்றது. இது தோல்​வியடைந்​தது. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்​தியை முடக்​கு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் மேற்காசியாவில் மீண்​டும் போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது கவனிக்கத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *