இலங்கை

பிணையில் இருப்பவருக்கு அமைச்சுப் பதவியா? ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தைக் கேலி செய்த எதிரணி

நீதிமன்றத்தில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ள ஒருவருக்கு நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவியை வழங்கியதன் மூலம், அந்த மோசடிகளில் ஜனாதிபதிக்கும் பங்குண்டா? என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. சாடியுள்ளார்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தற்போது நிலக்கரி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள குமார ஜயக்கொடி, முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுடன், தற்போது அவர் பிணையிலேயே வெளியே உள்ளார்.

தமது நண்பர் ஊழல்வாதி என்பது தெரிந்திருந்தும், அவருக்கு நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார். ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறும் ஜனாதிபதி, மோசடிப் பேர்வழிக்கு அமைச்சுப் பதவி வழங்கியிருப்பதன் பின்னணியில், அந்த மோசடிப் பணத்தில் ஜனாதிபதிக்கும் பங்கு செல்கின்றதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.

நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை கணக்காய்வு அறிக்கை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான நட்டம் மக்கள் மீதே சுமத்தப்படவுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, இது குறித்து ஜனாதிபதி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மௌனம் காப்பது ஏன்?

நண்பர்களுக்குச் சலுகை வழங்குவதில்லை எனக் கூறி அதிகாரத்தைப் பிடித்தவர்கள், தற்போது தமக்குத் தேர்தல் செலவு செய்தவர்களைத் தாராளமாகக் கவனித்து வருகின்றனர்.

தம்மிக பெரேரா முதல் மேல்மாகாண ஆளுநர் வரை பலருக்குச் சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. மத்திய வங்கி மோசடி குறித்து மேடைக்கு மேடை பேசியவர்கள், இதுவரை ஒருவருக்கு எதிராகவேனும் நடவடிக்கை எடுத்தார்களா?” – என்று ரஞ்சித் மத்தும பண்டார காட்டமாக வினவினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *