இலங்கை

ரஷ்யாவிடம் இருந்து நேரடி எரிபொருள் கொள்வனவு சாத்தியமற்றது – முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க

ரஷ்யப் பிரதிநிதிகளின் வருகையை ஒரு பெரிய வெற்றியாக அரசாங்கம் காட்ட முற்பட்டாலும், அது வெறும் அரசியல் பிரசாரமாகும். அரசாங்கம் கூறுவது போல ரஷ்ய அரசாங்கத்துடன் நேரடி ஒப்பந்தம் மூலம் எரிபொருள், உரம் அல்லது நிலக்கரியைப் பெறுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் முன்வைத்துள்ள முக்கிய காரணங்களின் பிராகாரம், ரஷ்யாவில் பத்து ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், ரஷ்யா இத்தகைய இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களை தனக்கு மிகவும் நெருக்கமான அல்லது இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகளுடன் மட்டுமே மேற்கொள்ளும். இலங்கை ரஷ்யாவிற்கு எதிரான நாடு அல்ல என்றாலும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள் பட்டியலில் இலங்கை தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விடுத்த நேரடி அழைப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்ததைக் குறிப்பிட்ட தூதுவர் உதயங்க, இதன் காரணமாக இலங்கைக்கு சிறப்பு அரசியல் ஆதரவை வழங்க ரஷ்யா ஆர்வம் காட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை டொலருக்குப் பதிலாக ரூபிள் நாணயத்தில் மேற்கொள்ள ரஷ்யா விரும்பினாலும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இலங்கை மத்திய வங்கி அதனை ஏற்கத் தயங்குவதாக உதயங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் எரிபொருள் வாங்க முயற்சி செய்து தோல்வியடைந்ததைப் போலவே, தற்போதைய அநுர குமார அரசாங்கமும் ரஷ்ய அரசாங்கம் எனக்கூறி இடைத்தரகர்கள் மூலம் தனியார் துறை மோசடியிலேயே ஈடுபடுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்த அணுசக்தித் திட்டங்களுக்கு உடன்படுதல் மற்றும் ரூபிள் நாணயப் பயன்பாட்டை அங்கீகரித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க முடியும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *