உலகம்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், முதன்முறையாக இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவினால் அந்தப் பாதையிலுள்ள தடைகள் நீக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்காக ஈரானிய அதிகாரிகளுடன் எவ்வித ஒருங்கிணைப்பும் செய்யப்படவில்லை என அமெரிக்காவின் ‘ஆக்சியோஸ்’ செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை மிக விரைவில் திறக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலிலேயே அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை பலத்தை அமெரிக்கா அழித்துள்ளதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் எண்ணெய் உலகின் மிகச்சிறந்த எண்ணெய் என்றும், அவற்றை பெற்றுக்கொள்வதற்காக காலியான எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் நாட்டுக்கு வருகை தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்னரே, ஈரான் மீதான குண்டுவீச்சை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *