உலகம்

நெதன்யாகு – ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடல்

லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு லெபனானிடமிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, நேற்று தனது அமைச்சரவையிடம் இதனை அவர் கோரியதாக ‘X’ தளத்தில் ஹீப்ரு மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுத பாணியாக்குதல் மற்றும் இஸ்ரேல் – லெபனான் இடையே அமைதியான உறவுகளை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைச் சீராக முன்னெடுக்கும் நோக்கில், லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளதாக NBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி NBC வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ நடவடிக்கைகளைக் குறைக்குமாறு நெதன்யாகுவிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

லெபனான் தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கைக்குள் உள்ளடக்கப்படவில்லை என்பதில் ட்ரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலும் உறுதியாக உள்ள போதிலும், ஒரு பயனுள்ள பங்காளியாக இருக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

லெபனான் மீது தொடர்ந்து பலமான தாக்குதல்கள் நடத்தப்படும் என நெதன்யாகு பகிரங்கமாக உறுதியளித்த சில நேரங்களிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் தாம் பதிலடி கொடுக்கக்கூடும் என்றும், போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகக்கூடும் என்றும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக NBC மேலும் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *