பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். சஹரான் மீது முழு குற்றங்களையும் சுமத்தி த்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க இடமளிக்காமல் உண்மையான சூத்திரதாரியை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்வதேச போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இது இலங்கையையும் பாதித்து வருகின்றது. இது கூடுதலாக விவசாயம், போக்குவரத்து, மின்சாரம் என சகல துறைகளையும் இது பாதிக்கச் செய்துள்ளது.
இப்போது விவசாயிகள் தற்போதைய நிலைமையில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் சோர்வடையமால் அவர்களை பாதுக்காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு சாதரண மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த யுத்தம் எவ்வளவு காலத்திற்கு தொடரப் போகின்றது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஏற்படக்கூடிய நெருக்கடியில் இருந்து இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
இதேவேளை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் யானைகளின் அட்டகாசமும் ஒரு விடயமாக இருக்கின்றது. இருட்டாக உள்ள இடங்களிலேயே யானைகளின் தாக்கங்கள் காணப்படுகின்றன. இதனால் அரசாங்கம் இந்த மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
இதேவேளை கல்வித் துறையில் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மற்றும் காத்தான்குடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை பெற்றுள்ளனர். இவர்களுக்கும் ஏனைய சகல மாணவர்களுக்கும் நாங்கள் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மூன்றாம் மற்றும் இரண்டாம் மட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவர்கள் மூலம் சில உண்மைகள் வெளிவருகின்றன. இந்நிலையில் முதலாம் மட்ட சந்தேக நபர்கள் யார்? அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன.
எனவே தயவு செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் புத்தகங்களை எழுதும் செயற்பாடுகள் ஊடாக உண்மைகளை புதைத்துவிடக் கூடாது. இந்த புத்தகங்களில் ஊடாக சஹரான் பிரதான சூத்திரதாரியென உண்மைகளை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். அவர் மூன்றாம், நான்காம் மட்ட குற்றவாளியே.
ஆனால் இதனை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகள் உள்ளனர். அவர்களில் இரண்டாம் மட்டம் வரையில் அரசாங்கம் முன்னேறியுள்ளது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்காக இந்த குற்றத்தை செய்த சூத்திரதாரி யார் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
அவரும் கைது செய்யப்பட்டாலே தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும். சஹரான் மீது முழுமையா குற்றத்தை சுமத்தி இயக்கியவர்கள் தப்பிக்க இடமளிக்கக்கூடாது. இயக்குனர்கள் இன்னும் இருக்கின்றனர். புத்தக வெளியீட்டில் அவர்கள் பிரசன்னமாகியிருந்தார்களா? என்று விசாரிக்க வேண்டும் என்றார்.
![]()