உலகம்

அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் உள்வாங்கப்படவில்லை – ட்ரம்ப்

ஈரானுடனான இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு காரணமாகவே லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், அந்த அமைப்பு மீதான தாக்குதல் தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அதனை ஒரு தனிப்பட்ட சிறு மோதல் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானிய அரச ஊடகங்களினால் அறிக்கையிடப்பட்டு, சர்வதேச செய்தி நிறுவனங்களால் பகிரப்பட்டு வரும் திட்டங்கள் போலியானவை என அமெரிக்க ஜனாதிபதி தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளுடன் எவ்வித தொடர்புமற்ற நபர்களினால் அனுப்பப்படும் ஏராளமான ஒப்பந்தங்கள், பட்டியல்கள் மற்றும் கடிதங்களை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில், இவர்கள் முற்றிலும் மோசடி செய்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள் மற்றும் அதற்கும் மேலானவர்களாவர். எமது மத்திய புலனாய்வு நிறைவடைந்ததும் இவர்கள் விரைவாக அம்பலப்படுத்தப்படுவார்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே உள்ளது என்றும், அது குறித்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

பாரசீக வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை செய்தியை அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *