உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் வியாழக்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
பாராளுமன்றம் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் இந்த வாரம் மூன்று நாட்களுக்குக் கூடவுள்ளது. எனினும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை காரணமாக புதன்கிழமை (08) சபை அமர்வுகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
அத்தோடு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (10) நடத்தப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் மற்றும் புதிய வெளிப்பாடுகள் குறித்து இந்த விவாதத்தின் போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()