உலகம்

ஈரானின் கண்ணில் மண்ணைத் தூவி விமானியைப் பத்திரமாக மீட்ட பரபரப்பான தருணம்!

ஈரானுக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்த அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தாக்கப்பட்ட விமானத்தில் 2 பேர் இருந்த நிலையில், ஒருவர் ஏற்கெனவே தப்பியிருந்தார். மற்றொருவர் ஈரானில் சிக்கிக்கொண்டார். அவரை, இஸ்ரேலின் உதவியுடன் அமெரிக்கா மீட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்குள் சிக்கியிருப்பவரை மீட்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இருப்பினும் இந்த பணி நன்கு திட்டமிடப்பட்டு, சிறப்பாக செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஈரானின் மலைப்பகுதிகளில் சிக்கியிருந்த அமெரிக்க விமானப்படை கர்னலை மீட்க நடந்த இந்த நடவடிக்கை, இராணுவ வரலாற்றிலேயே மிகவும் சவாலான மற்றும் தந்திரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மீட்புப் பணி தொடங்குவதற்கு முன்பே, அமெரிக்காவின் சிஐஏ, திட்டமிட்டு பொய்யை பரப்பியது. “விமானி பத்திரமாக மீட்கப்பட்டு வீதி வழியாக கொண்டு செல்லப்படுகிறார்” என்பதுதான் அந்த பொய். ஈரான் முழுவதும் இந்த தகவல் காட்டு தீ போல பரவிய நிலையில், ஈரான் இராணுவம் வீதிகளை சீல் வைத்து தேட தொடங்கியது.

இதனால் அமெரிக்க மீட்பு படையினருக்கு போதிய நேரம் கிடைத்தது. பாதிக்கப்பட்ட கேர்ணல், ஈரானியப் படைகளிடம் சிக்காமல் இருக்க சுமார் 7,000 அடி உயரமுள்ள மலை முகடுகளில் ஏறி மறைந்திருந்தார். தனது இருப்பிடத்தைக் காட்டிக்கொடுக்காமல் இருக்க, அவசர கால சிக்னல் கருவியை (Beacon) மிகக் குறைந்த நேரமே பயன்படுத்தினார்.

இவரை எப்படியாவது மீட்பது என்று முடிவெடுத்த அமெரிக்கா.. கடற்படை சீல்ஸ் மற்றும் கிரீன் பெரட்ஸ் போன்ற சிறப்புப் படை வீரர்களை நூற்றுக்கணக்கில் களத்தில இறங்கியிருந்தது. இது தவிர வான் பாதுகாப்பிலும் முக்கியத்துவம் கொடுத்தது. அதாவது, ஏ-10 போர் விமானங்கள் மற்றும் ரீப்பர் ட்ரோன்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வட்டமிட்டன.

மீட்கப்பட வேண்டிய வீரருக்கு 3 கி.மீ தொலைவிற்குள் வந்த ஈரானிய வீரர்களை ட்ரோன்கள் தாக்கி அழித்தன. பிளாக் ஹொக் (HH-60 Black Hawk) மற்றும் சி-130 (C-130) ரக விமானங்கள் வீரர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டன.

இஸ்ரேல் தனது சக்திவாய்ந்த உளவுத்துறை மூலம் விமானியின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிய உதவியது. மேலும், அமெரிக்காவின் மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, அந்தச் சமயம் ஈரானில் தான் நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

மீட்புப் பணியின் போது, இரண்டு அமெரிக்கப் போக்குவரத்து விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஈரானிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்டன. உடனடியாக மாற்று விமானங்கள் அனுப்பப்பட்டு அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பழுதடைந்த அந்த விமானங்கள் ஈரானியர்களிடம் சிக்காமல் இருக்க அமெரிக்காவே அவற்றை வெடிக்கச் செய்து அழித்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *