இலங்கை

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் அரசாங்கம்; இரகசிய இராணுவ ஒப்பந்தங்களை உடனடியாக பகிரங்கப்படுத்துக – வசந்த முதலிகே காட்டம்

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக உலக நாடுகளின் இறையாண்மை சிதைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இரகசிய இராணுவ ஒப்பந்தங்களை நாட்டு மக்களுக்கு மறைத்து, அந்நாடுகளுக்கு அடிபணிந்து செயற்படுகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்ட கண்டனப் போராட்டத்தின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

அமெரிக்கா தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்டவும், பிற நாடுகளின் வளங்களைச் சுரண்டவும் உலகெங்கும் குண்டுத் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கடந்த காலங்களில் வெனிசுலா ஜனாதிபதி மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைத் தூக்கிச் சென்ற அமெரிக்கா, இன்று அந்நாட்டைத் தனது விருப்பத்திற்கு ஏற்பச் சிதைக்கின்றது.

மறுபுறம், ஈரானின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காக அந்நாட்டு மக்கள் மீதும், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மீதும் குண்டுகளை வீசி பாரிய அழிவுகளை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது. கிரீன்லாந்து மற்றும் கியூபா போன்ற நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. உலகிற்குப் பாரிய அளவில் ஜனநாயகம் பேசும் அமெரிக்கா, நடைமுறையில் பிற நாட்டு மக்களின் தலைகள் மீது குண்டுகளை வீசி அழிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தன்னை ஒரு சார்பற்ற நாடாகக் காட்டிக்கொண்டாலும், அமெரிக்காவுடன் பல்வேறு இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி, இந்தியாவுடன் ஏழு பாதுகாப்பு உடன்படிக்கைகளை இந்த அரசாங்கம் இரகசியமாகச் செய்துகொண்டது. இன்று அந்த கறுப்பு தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவாகும். அந்தப் பாதுகாப்பு, சுகாதார மற்றும் எரிசக்தி உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்களை அரசாங்கம் இதுவரை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.இலங்கை செய்திகள்

அதேபோல், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி ஜப்பானுடன் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ இணக்கப்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அமெரிக்க – இந்திய உடன்படிக்கைகளை எதிர்ப்போம் என்றும், ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என்றும் முழக்கமிட்ட தேசிய மக்கள் சக்தி, இன்று அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொண்டு ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப மண்டியிட்டுச் செயற்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக இந்த அனைத்து இரகசிய உடன்படிக்கைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த ஆபத்தான ஒப்பந்தங்களைக் கிழித்தெறிய வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். அத்துடன் ஏகாதிபத்திய நாடுகள் முன்னெடுக்கும் இந்த அழிவு யுத்தங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்காவிற்கும் நாம் அழுத்தம் கொடுக்கின்றோம்.

இலங்கை வாழ் முற்போக்குச் சிந்தனையுள்ள மக்களிடம் நாம் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றோம் யுத்தம் நமக்குத் தொடர்பில்லாதது என்று வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்காதீர்கள். உலகில் எங்கு நடக்கும் யுத்தமும் நமது வாழ்க்கை, எதிர்காலம் மற்றும் நாட்டின் இறையாண்மையோடு நேரடியாகத் தொடர்புடையது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அடிபணிவு அரசியலுக்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *