வடமராட்சி கிழக்கிற்குள் நுழைந்து காட்டு யானைகள் மீண்டும் பெரும் அட்டகாசம்; அதிக எண்ணிக்கையான தென்னைகள் அழிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளம் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை (03) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் அதிக எண்ணிக்கையான தென்னைகளை நாசம் செய்து அழித்துள்ளன.
இதுதொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கடந்த மாதம்-19 ஆம் திகதி இரவு வடமராட்சி கிழக்குப் பகுதிக்குள் நுழைந்த பல காட்டு யானைகள் கேவில், கட்டைக்காடு, நித்தியவெட்டைப் பகுதிகளில் காணப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தென்னைகளை அழித்து நாசம் செய்திருந்தன.
இந்நிலையில் அதிகாலை வடமராட்சி கிழக்குச் சுண்டிக் குளம் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அதிக எண்ணிக்கையான தென்னைமரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
காட்டு யானைகள் இரண்டாவது தடவையாகப் பயன்தரு தென்னைகளை நாசம் செய்துள்ளமையால் வடமராட்சி கிழக்குப் பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் அச்சமும் அடைந்துள்ளனர்.
தேசிய பூங்காவென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து மக்களை அகற்றுவதற்காகத் தான் இவ்வாறு காட்டு யானைகள் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய பூங்காவெனக் கூறப்பட்டு ஏற்கனவே காட்டு யானைகளால் அழிவடைந்த தென்னைகளுக்கான இழப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
![]()