தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம் ஆரம்பம்; இன்றும் முன்னெடுக்கப்படும்

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (31) மாலை 4 .45 மணியளவில் ஆரம்பமாகி மாலை-06 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, பெளர்ணமி தினமான இன்று புதன்கிழமையும் (01) காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
![]()