அமைச்சர் குமார பதவி விலகாதது ஏன்?; கேள்வி எழுப்பும் நாமல்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒன்று அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி அவரை பதவி நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் இரண்டுமே நடைபெறவில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அமைச்சரவையில் ஊழல்வாதிகளையே வைத்துள்ளார். அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி இதுவரையில் எடுக்கவில்லை.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறான நிலையில் அமைச்சர் நேர்மையானவராக இருந்தால் சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு அமைச்சு பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி அவரை பதவி நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அமைச்சரவையில் ஊழல்வாதிகளையே வைத்துள்ளார்.ஊழல்வாதிகளை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு ஜனாதிபதியால் எவ்வாறு ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும்? எனக்கேள்வி எழுப்பினார்.
![]()