‘சேவையை முடக்கி போராடுவோம்’ பொது மலசலகூட விவகாரத்தில் யாழ் மாநகர சபைக்கு இ.போ.ச எச்சரிக்கை

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூட நிர்வாகம் தொடர்பில் யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையம், சிலமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
ஏற்கனவே, பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில், கடந்த ஆட்சிக்காலத்தில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த பொது மலசலகூடம் கட்டுவதற்கான திட்டம் அனுமதிக்கப்பட்டது.
இ.போ.சவின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த மலசலகூடம் அமைக்கப்பட்டது. கட்டுவதற்கான அனுமதியையும் இ.போ.சவிடமிருந்தே யாழ் மாநகரசபை பெற்றிருந்தது.
எனினும் கடந்த 13ஆம் திகதி இந்த மலசலகூடத்தை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை மாநகரசபை தன்னிச்சையாக பத்திரிகை மூலம் கோரியது பிரச்சினைக்கு வித்திட்டது.
இவ்வாறான நிலையில், மாநகரசபை ஊழியர்கள் இன்று காலை மலசலகூடத்திற்கு நீர் இணைப்பு வழங்க சென்றபோது, இ.போ.ச அதிகாரிகள் தடுத்துள்ளனர். இது தான் இந்த பிரச்சினை உருவாக காரணமாக அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இ.போ.சவின் நிலப்பரப்பில்தான் இந்த மலசலகூடம் கட்டப்பட்டுள்ளதாகவும், மாநகரசபை தன்னிச்சையாக இதை நிர்வகிக்க முயன்றால் ‘சேவையை முடக்கி போராடுவோம்’ எனவும் இ.போ.ச எச்சரித்துள்ளது.
எனினும் மாநகரசபை உறுப்பினர்கள், குறித்த நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. மக்கள் சேவைக்காக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை தொடர்ந்தும் இ.போ.ச இடையூறு செய்தால் ‘பொலிஸ் மற்றும் சட்ட உதவியுடன் கட்டடத்தை திறந்தே தீருவோம்’ என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
![]()