யாழில் உப அதிபரின் வீட்டில் 38 இலட்சம் ரூபா நகைகள், பணம் கொள்ளையடித்த பெண் கைது; வீட்டுப் பணிப் பெண்ணாக செயற்பட்டவர்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் கடந்த கடந்த 16 ஆம் திகதி சூட்சுமமான முறையில் திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டிருப்பதுடன்-சந்தேக நபரான பெண் ஒருவரையும் வெள்ளிக்கிழமை(27)கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் உப அதிபருடைய வீட்டில்,வீட்டுப் பணிப் பெண்ணாக பாசாங்கு செய்து தங்கியிருந்த பெண்ணே இவ்வாறு உப அதிபரின் மனைவியின் 38இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுக் கொண்டு தலைமறைவாகியிருந்தார்.
அதன்பின்னரே மேற்படி பெண் போலியான பெயர் உள்ளிட்ட விபரங்களுடன் பணிப் பெண்ணாக கடமையாற்றியமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண பொலிஸார் மேற்படி பெண்ணை கைது செய்ததுடன் தங்க நகைகளையும் மீட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
![]()