இலங்கை

அரசியல் நோக்கங்களுக்காக பொலிஸார் சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள் 

மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார். பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெறாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மீது ஒட்டுமொத்த சுமையையும் திணிக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது. நெருக்கடி நிலைமையை கையாளும் திறன் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும்.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளான போது மக்கள் விடுதலை முன்னணி அந்த நெருக்கடியை தனது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தியது. தமது ஆதரவாளர்களை வீதிக்கிறக்கி போராட்டங்களை தோற்றுவித்தது.

நெருக்கடியான நிலைமையில் அரசாங்கங்களை பலவீனப்படுத்தும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று நாங்கள் செயற்படபோவதில்லை. மக்களை வீதிக்கு இறக்கவுமில்லை. எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட போது அரசாங்கம் அதை பொருட்படுத்தவில்லை. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் மின்னுற்பத்தி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளத.

தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்படவில்லை. நட்டம் ஏற்படவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் குறித்த நிலக்கரி உற்பத்தியால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார். பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றார்.a

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *